Wednesday, February 13, 2013

வெட்டிப்பேச்சு ( தொடர் 1 )


22 வருடங்கள் கடந்து விட்ட என் வாழ்கையில்,பரிசு பொருள் என எதையும் பெற்றதில்லை, எதிலும் ஆர்வம் கிடையாது,வேகம் கிடையாது,நான் சரியான முட்டாள் என கருதியிருந்தேன்.
வாழ்கை யாரையும் வெறுங்கையோடு நிறுத்தி வைக்காது,என தெரிந்து கொண்டபொழுது , தேடத் தொடங்கி,நெடுநாட்கள் கடந்த பின்னர் கண்டுபிடித்த ஒன்று தான் என் பேச்சு.

 மா.......அம்மா........எனும்  மழலை வார்த்தைகள் முதல், இன்று வரை முடிவில்லாமல் தொடர்கிறது என் பேச்சு.
சில பிரிவுகளும்,இறுக்கமான மௌனங்களும் ஆங்காங்கே தடை செய்த பொழுதும், தன் தவறுகளை திருத்திக்கொண்டு,குழந்தை என பிறந்து,வெற்றிநடை பழகும்  என் பேச்சு.அகல கண்விரித்து, ஆச்சர்யங்களுடன்,நலம் விசாரிக்க  தொடங்கி,ஆங்காங்கே மரநிழல் தேடி,தண்ணீர் பருகி,பெருமூச்சுடன் நெடுதூர பயணமாக தன் உருவத்தை பதிவு செய்துள்ளன.

என் ஒவ்வொரு பேச்சின் முடிவிலும், தன் முதல் திரைப்படம் காணும் இயக்குனர்களை போல அதீத சந்தோசமும்,உற்சாகமும் அடைந்து விடுகிறேன்,இதனாலே  என் மகிழ்ச்சி கருதிய நண்பர்கள் ஒருபோது என்னை மௌனிக்க விடுவதில்லை.
நிண்ட நேரம் முகம் பார்த்து விட்டு மெல்லிய சிரிப்போடு,
"சொல்லு மச்சி ......" எனும் வார்த்தைகளால் தொடர்ந்து தூண்டிய படியே இருப்பார்கள்.
வெறும் வெட்டிபேச்சுக்களாக இருந்தவைகள்,இன்று வாதங்களாகவும், உரையாடல்களாகவும் முன்னேற்றம் அடைந்துள்ளன.
நிறைய பேச்சாளர்களை நண்பர்களாக பெற்றுள்ளேன்.அதனினும்

என் பேச்சுக்கு பிரியமான தோழி ஒருத்தி இருக்கிறாள்,அவள் என் அம்மா,என் பேச்சுக்களின் பள்ளிக்கூடம் அவள், அதிக வெகுளி,என் வாதங்களுக்கு எதிர்போ,விரோதமோ அளிக்கத் தெரியாதவள்,சொல்வதெல்லாம் சரி எனும் பொருட்டு தலையசைப்பால். திடிரென அவள் முகத்தில் சிரிப்போ,அழுகையோ,பயமோ,ஏக்கமோ தென்படுகிறதென்றால், வெற்றி, சிறப்பாக பேசியிருக்கிறேன் என்பது பொருள்.ஆனால் பரிசு எதுவும் வழங்கத்தெரியாது.

அப்பா,என் இனிய நண்பர்களுள் ஒருவர். அம்மா பள்ளிகூடமெனில்,
அப்பா பயிற்சிக்கூடம், போட்டிக்கு உகந்த பேச்சாளர்.
சொந்த தொழிலே கெளரவம்,அதுவே சுகம் என, சிறு வயதிலே வியாபாரம் தொடங்கிவிட்டார், அது நஷ்ட்டத்தில் போனதெல்லாம் வேறு கதை.
அப்பா அரசுஉழியர் ஆகவேண்டுமென ஆசை கொண்டிருந்தாள்  அம்மா, அது நிறைவேறாமல் போகவே, ஏக்கத்துடன் என்னை அரசுஉழியராக சொல்லி  அறிவுரித்துக்கொண்டிருந்தாள்.
நானோ,அரசுஊழியமென்பது இயலாதவர்களுக்கும்,அதிக தேவை உள்ளவர்களுக்கும், கிடைக்கட்டும். நான் நன்கு படித்து என் சொந்த முயற்சியிலே முன்னேறுவேன் என வாதம் பேசிக்கொண்டிருந்தேன்.

அப்பா இடைமறித்து "நி பெரிய முற்போக்கு சிந்தனையாளன வருவடா"
என்றார், அவருக்கு சாதகமாக பேசியதாலும் அப்படிச் சொல்லியிருக்கலாம்.

ஆனால் தன் மகனை டாக்டர்,கலெக்டர் என காணும் அப்பாக்களிடையே,
என்னை முற்போக்கு சிந்தனையாளனாக பாவித்த அப்பாவின் வார்த்தைகள் என் பேச்சுக்கான முதல் பரிசு.

இதேபோலத்தான்,என் கல்லூரி இரண்டாம் வருடத்திலும் நடந்தது.
முதல்வருட மாணவர்கள் உள்ளேறினர், அனைத்து விதமான ராக்கிங்களும்,
முடிவடைந்ததை தொடர்ந்து,புதுவிதமான கொடுமையாக இருக்கும் என, என்னை கதை பேச அழைத்து சென்றார்கள்,
நான் அசரவில்லையே, விஜய்,அஜித் ரசிகர்கள் என பகுதி வாரியாக பிரித்துக் கொண்டு, கதை பேசி கலக்கியன்.
உணவருந்துகையில் முத்த மாணவர் பகுதிக்குள், முதல்வருட மாணவர்கள் நுழைய கூடாது என்பது விடுதியின் எழுதப்படாத விதி.
ஆனால் என்னிடம் கதை கேட்கும் பொருட்டு, விதிகளை உடைத்து புரட்சி ஏற்ப்படுதியுள்ளேன். வெறித்தனமான விஜய் ரசிகன் ஒருவன் இருந்தான்,
எங்கே கதை பேசிக்கொண்டிருந்தாலும், சரியாக இடைவேளையில் புகுந்து,
"அண்னே விஜய் கதையா?" என ஆச்சர்யம் கலந்து கேட்பான். முடிந்தவரை சொல்லிக் கொண்டிருக்கும் கதையையே விஜய்க்கான கதையாக்குவதற்குள்,
மண்டை சூடாகி விடும்.
வழக்கமாக மாலை 8 மணியளவில் ராக்கிங் தொடங்கும், நானோ 5 மணிக்கெல்லாம் சென்று அடைக்கலம் அடைந்து விடுவேன்.
ராக்கிங் செய்யும் சகாக்கள் நான் இருக்கும் அறையை மட்டும் விட்டு விடுவார்கள், கதை கேட்கும் ரசிகர்களை நடுவில் வெளியிழுத்தால்,பின்னர் அவர்கள் சிக்க வேண்டியதிருக்குமோ எனும் பயம்.
மெல்ல மெல்ல இதை உணரத்தொடங்கிய முதல் வருட மாணவர்கள், உட்கார இடமின்றி ஒரே அறையில் குவிந்து கிடந்தார்கள்,திரையரங்கில் அமர்வது போல், என்னையே திரையாக பாவித்து கண்சிமிட்டாமல்,கதை கேட்க வைத்த அனுபவம் அலாதியானது.

ஒவ்வொரு அறையாக நோட்டமெடுத்து,ராக்கிங் செய்பவர்களை கணக்கெடுத்துக்கொண்டார் விடுதி காப்பாளர்,
மறுநாள் கல்லூரியின் அறிவிப்பு பலகை,கொத்தாக பிடிபட்டவர்களிடம் சொல்லியது 15 நாள் தண்டனை விடுப்பு என்று,
என் பெயர் மட்டும்  அதில் இடம்பெறவில்லை, நான் நல்ல
விதமாக,அன்பாக நடந்து கொள்கிறேன் என முதல் வருட மாணவர்கள் வாய்மொழிச் சான்றிதல் அளித்துள்ளார்கள்.
என் பேச்சுக்காக நான் பெற்ற பரிசுகளில்,பெரு மதிப்புடையதும்,மறக்க முடியாதது,என் 15 நாள் கல்லூரி நாட்கள்.

கடந்த சில நாட்கள் முன்பு, ஒரு மணி நேரம் மௌனவிரதம் இருக்க சொல்லி போட்டி வைத்தார்கள், என் நண்பர்கள்.
போட்டி நேரம் கடந்தும் என் மௌனம் நீடித்தமையால்,
" டேய் நீ இப்போ பேசப்போறிய இல்லையா?" என செல்லமாக கடிந்து கொண்டான் என் இனிய நண்பன்,
எப்போதும் எதிரணி என்றாலும்,அதிலே அன்பு வளர்க்கும்,
செப்பனிடவும்,செதுக்கிடவும் வைரமென பட்டைதீட்டிடவும்,என் வாதங்களை நுண்ணிப்பாக கவனிக்கும்.
என்னை குழந்தை என கொண்டு என் வார்த்தைகளை மழலையாக கருதி மௌனமாக புன்னகை செய்திடும் என் நண்பர்கள் வெறுமென பரிசு பொருட்கள் மட்டுமல்ல,பேச்செனும் ஆழ்கடல் முழ்கிக் கிடைத்த முத்துக்கள்.

வெறுமென பேசுகிறேன் அவ்வளவு தான்,என விட்டுப்போக தோன்றவில்லை.
சாலமன்பாப்பையா பேசினால் நிச்சயம் சிரிப்போடு தான் முடித்து வைப்பார், கோபிநாத் தன் வாதத்தலைப்பினை, விளக்காமல் விடுவதில்லை,
சிவகுமார் பேசினால் ஆன்மிகம், சுகிசிவம் பேசினால் சிந்தனை, ஒவ்வொரு பேச்சாளர்களிடமும் ஒரே விதமான தொனி தென்படுவதுண்டு.அதேபோல
என் பேச்சுக்கள் எதை பிரதிபலிக்கின்றன? எனும் கேள்வியை நண்பர்களிடம் கேட்ட போது, ஒருவரிடமும் பதில் இல்லை.என் கேள்வியை கொஞ்சம் விளக்கி கூறியபடி இருந்தேன். " ஏன்டா கமல் மாதிரி புரியாமலே பேசிக்கிட்டுருக்க" என சொல்லிய நண்பனுக்கு நன்றி. அவனை அறியாமலே,என் கேள்விக்கு பதில் அளித்தான் அல்லவா !

அய்யன் வள்ளுவன் சொல்லும் நாவடக்கத்தையும் மனதில் கொள்க,எனில் 
வெறுமே மகிழ்ச்சி மட்டுமல்லாது, நிறைய வருத்தங்களையும், அவமானங்களையும் அள்ளித்தந்துள்ளது என் பேச்சு.
கல்லூரி நாட்களில் பேசுகிறேன் என அதிகம் வெளி நடத்தப் பட்டிருக்கிறேன்.
"கொஞ்ச நேரமாவது பேசாம இறுக்கிய" என கடிந்து கொண்டவர்கள் ஏராளம்.
நான் அவன் தோழியுடன் அதிகம் பேசுகிறேன் என சொல்லி,கோபம் கொண்டு என்னுடன் தொடர்பில் இல்லாமலிருக்கிறான் ஒரு நண்பன்.
பேசிப் பேசி ஒருவரை ஒருவர் பிடித்து போனோம் பின்னர் ஒரு நாள்,
"ஒரு பிரச்னைனு வரும் போது உனக்கு சுத்தமா பேசவே தெரியல டா"
என பிரிந்தவள் இரண்டு வருடங்கள் கழிந்தும் இன்னும் பேசாமலே இருக்கிறாள், மனஇறுக்கத்துடன் பேசாத பொழுதுகள் நரக வேதனை,
என் பேச்சில் காட்டும் ஆர்வத்தை, என்னுடன் பேசாதவர்களிடம் காட்டுவதில்லையோ என தோன்றுகிறது. போனது போகட்டும்,
இனி யாரிடம் பேசாமல் இருக்கப்போவதில்லை,


இத்தனை சொல்லும் என் பேச்சினை  பற்றி, ஒரு கவிதை எழுதலாம் என தோன்றுகிறது,இதோ:

                                    மதம் இறைவனை பேசுகிறது,
                            இயற்கை இயல்பினை பேசுகிறது,
                                மௌனம் மனதினை பேசுகிறது.


இனி என் தொடர் வாயிலாக இறைவனையும்,இயல்பினையும்,மனதினையும்,

                                                                                                                                  பேசுவோம்.....

No comments:

Post a Comment